உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ரூ.75 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி - வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க திட்டம்

Published On 2022-05-06 04:01 GMT   |   Update On 2022-05-06 04:01 GMT
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015 வரை ரூ.224 கோடி செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது.
உடுமலை:

பி.ஏ.பி., பாசனத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து சேகரித்து பரம்பிக்குளம் அணை மற்றும் சர்க்கார்பதி வழியாக திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்படுகிறது. 

இக்கால்வாய் மலைப்பகுதியில் 49.300 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. திட்டத்தின் ஆதாரமாக உள்ள இந்த சமமட்ட கால்வாய் முழுவதும் மலைப்பகுதியில் பல இடங்களில் சுரங்கம் அமைத்தும் கொண்டு வரப்படுகிறது.

நீண்ட கால பயன்பாடு, மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு என கரைகள் வலுவிழந்தது. திட்ட தொகுப்பு அணைகளில் முழுமையான நீர் எடுக்க முடியாததோடு நீர் இழப்பும் அதிகரித்து வந்தது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015 வரை ரூ.224 கோடி செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கி.மீ., 30.100 முதல் 49.300 வரை 5.26 கி.மீ., உள்ள கால்வாய் பகுதி புதுப்பிக்கப்படாமல் விடுபட்டது.

மேலும், பல இடங்களில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் நிலுவையில் இருந்தது. இப்பகுதிகளில் அடிக்கடி உடைப்பு, மண் சரிவு, நீர் இழப்பு அதிகரிப்பு ஏற்பட்டது. 

கால்வாய் புதுப்பிக்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் விடுபட்ட பகுதிகளை புதுப்பிக்க கடந்தாண்டு ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் நான்கு மற்றும் முதல் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் தொடர்ந்து  வழங்க வேண்டியிருந்ததால் பராமரிப்பு பணி துவங்கவில்லை. இந்நிலையில் தற்போது முதல் மண்டல பாசனத்திலுள்ள நிலங்களுக்கு இறுதி சுற்று நீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

வருகிற 15-ந் தேதிக்குள் முதல் மண்டல பாசனத்தை நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு பின், விடுபட்ட பகுதிகளில் கால்வாய் புதுப்பிக்கும் பணியை துவக்கி ஜூன், ஜூலை மாதங்களில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கால்வாய் பகுதிகளில் கட்டுமான பொருட்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணியில் திருமூர்த்தி கோட்டத்திற்குட்பட்ட 5.26 கி.மீ., நீளம் உள்ள பகுதி விடுபட்டது. கடந்தாண்டு நிதி பெறப்பட்டு டெண்டர் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்தது. பாசனத்திற்கு நீர் வழங்க வேண்டும் என்பதால் பணி துவக்கவில்லை.

தற்போது முதல் மண்டல பாசனம் வருகிற 15-ந்தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு நீர் வழங்கும் பணி முடிந்ததும் அடுத்து ஆகஸ்டு மாதம் இரண்டாம் மண்டல பாசனம் துவங்கும்.

அதற்குள் விடுபட்ட பகுதிகளில் பணி மேற்கொள்ளப்படும். பருவ மழை துவங்கி நீர் எடுப்பதற்குள் முடிந்த அளவு பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News