ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை

Published On 2021-10-28 05:03 GMT   |   Update On 2021-10-28 07:06 GMT
சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 6-ம் நாளான வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 7-ம் நாளாள 10-ந் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த 2 நாட்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.



மேலும் இந்த ஆண்டு பக்தர்கள் கோவில் மற்றும் வளாக பகுதிகளில் தங்க அனுமதி கிடையாது. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை.

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.

பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை. தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்கவும் அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News