செய்திகள்
கொலை

உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்- பதறவைக்கும் சம்பவம்

Published On 2021-07-22 07:03 GMT   |   Update On 2021-07-22 11:02 GMT
உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.

லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினார்கள். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

லூதியானாவில் தங்கி இருந்த போது அவர் ஜீன்சை அணிய தொடங்கினார். அது அவருக்கு பிடித்து இருந்ததால் கிராமத்துக்கு சென்ற பிறகும் ஜீன்சை அணிந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது என்றும், இந்திய உடைகளைதான் அணிய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் அதற்கு சிறுமி மறுத்து விட்டாள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுமியை சரமாரியாக தாக்கினார்கள்.

அவரை சுவற்றில் மோதியும், அடித்து உதைத்தும் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசிவிட்டு சென்றனர்.



சிறுமி பிணமாகக் கிடப்பதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர்.

சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News