உள்ளூர் செய்திகள்
பலி

விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்- தண்ணீரில் மூழ்கி மாணவி உள்பட 3 பேர் பலி

Published On 2022-01-17 03:50 GMT   |   Update On 2022-01-17 03:50 GMT
விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே பேர்நாயக்கன்பட்டி ஊருணி உள்ளது. நேற்று அருந்ததியர் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி சந்தனமாரி (வயது 27) அந்த ஊருணியில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.

உடனே அதிர்ச்சி அடைந்த அங்கு குளித்து கொண்டு இருந்த காளியம்மாள், சுந்தரம்மாள், ஆகியோர் நீரில் மூழ்கிய சந்தன மாரியை மீட்க முயற்சி செய்தனர். அவர்களால் மீட்க முடியவில்லை. பெண்கள் சத்தம் போடுவதை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீரில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சந்தனமாரியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தனமாரியை காப்பாற்ற முயன்ற காளியம்மாள், சுந்தராம்மாள் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மற்றொரு சம்பவம்...

சாத்தூர் அருகே என்.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த சண்முகையா மகள் அபிநயா (வயது 19). இவர் சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய தோழி பொன்மாடன் மகள் மனோரஞ்சிதம் (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று என்.வெங்கடேஸ்வரபுரத்திற்கு அருகில் உள்ள குவாரிக்கு குளிக்க சென்றனர்.

இருவரும் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் அபிநயாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மனோரஞ்சிதத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). டிரைவர். இவருக்கு தங்கத்தாய் என்ற மனைவியும், முனீஸ்வரி, பிரியதர்ஷினி, கருப்பசாமி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தங்கதத்தாய் சரஸ்வதி பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

இந்தநிலையில் முத்துப்பாண்டி, அம்மாபட்டி கண்மாயில் குளித்தபோது திடீரென மாயமானார். பின்னர் அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டியின் தந்தை வேலாயுதம், மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News