செய்திகள்
கோப்புப்படம்

உடுமலை அருகே கயிறு ஆலையில் தீவிபத்து

Published On 2021-04-30 08:54 GMT   |   Update On 2021-04-30 12:41 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கியாஸ் குடோன் பின்புறம் கயிறு திரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.

இருப்பினும் தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த விலைமதிப்புமிக்க 14 எந்திரங்கள் எரிந்து நாசமானது. கயிறுகளும் எரிந்து நாசமாகின. மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொழிற்சாலை முன்புறம் உள்ள கியாஸ் குடோனில் தீ பரவியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு வீரர்கள் சுதாரித்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News