உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் சிலை மதில் சுவர் மீது மோதிய கார்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
மனைவிக்கு ஓட்ட கற்று கொடுத்த போது மதில் சுவர் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:
ஆலந்தூரை அடுத்த மடுவாங்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் செய்யது (வயது26).
இவர் நேற்று இரவு தனது மனைவிக்கு ஆதம்பாக்கம் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார். அங்கிருந்த திருப்பத்தில் வேகத்தை குறைக்காமல் காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள அம்பேத்கர் சிலை அமைந்துள்ள வளாகத்தின் மதில் சுவரில் இடித்து தள்ளி உள்ளே போய் நின்றது.
இடித்த வேகத்தில் காரின் உயிர் கவச பலூன் காற்றுடன் அசுரவேகத்தில் விரிந்ததால் கணவன் மனைவி இருவரும் எந்த காயமின்றி உயிர் தப்பினார்.
வேறு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அம்பேத்கார் சிலை பராமரிப்பு கமிட்டியினர் மதில் சுவரை கட்டித் தரும்படி கேட்டனர். செய்யது கட்டித் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதியாமல் விட்டு சென்றனர்.
இந்த விளையாட்டு திடலில் மாலை நேரங்களில் சிலம்பம், கராத்தே வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். இங்கு கார் ஓட்ட பயிற்சி செய்தால் ஏதாவது விபத்து ஏற்படும். அதனால் யாரும் பயிற்சி எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.