வழிபாடு
கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றதை படத்தில் காணலாம்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

Published On 2021-12-20 09:04 GMT   |   Update On 2021-12-20 09:04 GMT
பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று மார்கழி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலையிலேயே குவிந்தனர்.

இதையடுத்து காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவில் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு காலை 10 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் வனத்துறை கேட் மூடப்பட்டது. பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவுர்ணமி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீரோடை பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News