லைஃப்ஸ்டைல்
சருமம், கூந்தலில் ஏற்படும் பாதிப்புகள்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்

Published On 2021-07-03 07:22 GMT   |   Update On 2021-07-03 07:22 GMT
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் சிலருக்கு பாதிப்பு உண்டாகலாம். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களில் சிலர் உடல் சோர்வு, தசை வலி, மூளை சோர்வு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இவை தவிர கூந்தல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த பாதிப்புகள் 6 முதல் 9 மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

கொப்புளம்: கொரோனா தொற்றின்போது தடிப்பு, கொப்புளம் போன்றவை ஏற்படுவது பொதுவானது. சிலருக்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் பாதிப்பு உண்டாகலாம்.

முடி உதிர்தல்: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 2 முதல் 3 மாதங்களுக்கு பிறகு முடி உதிர்தல் பிரச்சினையை எதிர்கொள்வதாக பலர் புகார் அளித்திருக்கிறார்கள். கூந்தலை அலசும் போது, தலை சீவும்போது, குளிக்கும்போது அடர்த்தியாக முடி உதிர்வதை கண்கூடாக காண நேரிடும். இந்த வகையான முடி உதிர்தல் ‘டெலோஜென் எபுவியம்’ என்று அழைக்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒன்றரை மாதங்களில் இந்த பிரச்சினை தொடங்கலாம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரும்போது இந்த பாதிப்பு நிகழும்.

பொதுவாக பிரசவம், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ‘டெலோஜென் எபுவியம்’ பிரச்சினையை எதிர்கொள்வார்கள். அந்த வரிசையில்
கொரோனா
வும் இணைந்திருக்கிறது. கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனை தவிர்க்க இயலாதது.

கொரோனா தொற்றும், கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். பிற வகையான டெலோஜன் எபுவியத்துடன் கொரோனா பாதிப்பை ஒப்பிடும்போது இந்த வகையான முடி உதிர்தல் தீவிரமாக இருக்கும். சிலருக்கு வழுக்கை தலை பிரச்சினை ஏற்படக்கூடும்.

புண்கள்: ‘கோவிட் பீட்’ எனப்படும் இது பொதுவாக கைகளிலும், கால்களிலும் காணப்படும். இந்த பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் விரல்கள் நீலம் அல்லது சிவப்பு கலந்த நீல நிறத்தில் காணப்படும். பெரும்பாலும் வெளி நாடுகளில் இத்தகைய அறிகுறிகள் தென்படுகிறது. இந்தியாவில் இத்தகைய அறிகுறிகள் இல்லை.

வறட்சி: தைராய்டு அல்லது நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஏற்கனவே சில சரும பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். சரும வறட்சியும் எட்டிப்பார்க்கும். நோய்த்தாக்குதலின் போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளும் சரும வறட்சிக்கு வித்திடலாம்.

சரும அரிப்பு: கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான சமயத்தில் இந்த பிரச்சினையை அனுபவிக்கக்கூடும். நமைச்சல், அரிப்பு போன்றவை உடலின் எந்த பகுதியிலும், எந்த நேரத்திலும் தோன்றும். சில நேரங்களில் சிவப்பு நிறத்தில் தடிப்பு, சரும ஒவ்வாமை பிரச்சினைகள் உண்டாகும். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் இத்தகைய பாதிப்புகள் நீடிக்கலாம்.

இத்தகைய சருமம், முடி சார்ந்த பிரச்சினைகளை தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும் போதுமான ஊட்டச்சத்துக்களை சாப்பிடுவதும், சருமத்தை ஈரப்பதமாக பராமரிப்பதும் பாதிப்பின் வீரியத்தை தடுக்க உதவும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவது பலன் தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் பிரச்சினைகளை களையலாம்.
Tags:    

Similar News