செய்திகள்
கடலூர் உள்பட 4 ஒன்றியங்களை சேர்ந்த 1,754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
கடலூர் உள்பட 4 ஒன்றியங்களை சேர்ந்த 1,754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதிஉதவியை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர்:
கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 4 ஒன்றியங்களை சேர்ந்த 1754 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் நிதிஉதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 14 கிலோ 32 கிராம் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கும் விழா கடலூரில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 1754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் நகரசபை தலைவர் குமரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட இணை செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் முத்துலிங்கம், பேரவை பொருளாளர் ஆறுமுகம், நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் சுரேஷ், தஷ்ணா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வினோத் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட குத்துச்சண்டை பயிற்சி மேடையை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பயிற்சியாளர்கள் ஹரிபிரசாத், சிவராஜ் மற்றும் ஆர்.வி. செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.