செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை படத்தில் காணலாம்.

நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

Published On 2019-09-11 06:06 GMT   |   Update On 2019-09-11 06:06 GMT
நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராமவரம்புதூர், செம்பாலி கரடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் தீபிகா (வயது 9).

குழந்தை தீபிகாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இந்த காய்ச்சல் குணமடையவில்லை. மாறாக தீவிரமானது. இதனால் தீபிகாவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் காண்பித்தனர். அவரை பரிசோதித்தபோது டெங்கு காய்ச்சல் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீபிகாவை பெற்றோர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதைபோல் இங்கு நாமக்கல்லை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த பிரிவில் உள்ள மற்ற குழந்தைக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தனி வார்டில் வைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை வளாகம் உள்பட பொது இடங்களில் நிலவேம்பு கசாயம் மற்றும் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வழங்க சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.



Tags:    

Similar News