செய்திகள்
மினி பஸ்சில் குண்டு வெடிக்கும் காட்சி

ஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி

Published On 2019-09-21 10:58 GMT   |   Update On 2019-09-21 12:09 GMT
ஈராக் நாட்டில் மினி பஸ்சை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாக்தாத்:

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கிலும் ஆதிகம் செலுத்தி வந்தது. பின்னர் அரசு படைகள் உதவியுடன் 2017-ம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. 

ஆனாலும், நாட்டின் ஒரு சில பகுதிகளில் மறைந்து இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கின் கர்பலா நகரை நோக்கி 17 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்நகரின் ராணுவ சோதனைச்சாவடி ஒன்றை பஸ் கடந்த போது பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 



இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத போதும் இது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக்கில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News