உள்ளூர் செய்திகள்
தக்காளி

பாலக்கோடு மார்க்கெட்டுக்குவரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

Published On 2021-12-08 20:37 GMT   |   Update On 2021-12-08 20:37 GMT
பாலக்கோடு பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மீண்டும் குறையத்தொடங்கியது. இதனால் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் தக்காளியை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு நாள் ஒன்றுக்கு 50 டன் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தக்காளிகளை வியாபாரிகள் வாங்கி திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தக்காளிகள் செடிகளிலேயே அழுகின. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தநிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்தொடங்கியதால் விலை குறையத்தொடங்கியது. தற்போது பாலக்கோடு பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மீண்டும் குறையத்தொடங்கியது. இதனால் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.அதன்படி நேற்று பாலக்கோடு மார்க்கெட்டில் ஒரு கிரேடு (20 கிலோ) தக்காளி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை மீண்டும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News