செய்திகள்
கோப்புபடம்

தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

Published On 2021-06-06 13:59 GMT   |   Update On 2021-06-06 13:59 GMT
குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கிய மக்கள், இரண்டாவது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டதாலும், இறப்பு விகிதம் அதிகரித்ததாலும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போட வரும் மக்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவர்களில் சில நூறு பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

மாவட்டம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 450 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 46 ஆயிரத்து 429 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மொத்தத்தில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து தடுப்பூசி வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Tags:    

Similar News