ஆன்மிகம்
இயேசு

இயேசு ஏன் உன்னை நேசிக்கிறார்?

Published On 2020-06-25 09:11 GMT   |   Update On 2020-06-25 09:11 GMT
இயேசுவின் செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, நோக்கம் உண்டு, முக்கியமாக மனிதகுலத்தை நேசிப்பதற்கு இயேசுவின் அன்பு உலகத்தையும், தனிமனித உள்ளத்தையும் சுற்றியே செயல்படுகிறது.
இயேசு ஏன் உன்னை நேசிக்கிறார்? தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16).

இயேசுவின் செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, நோக்கம் உண்டு, முக்கியமாக மனிதகுலத்தை நேசிப்பதற்கு இயேசுவின் அன்பு உலகத்தையும், தனிமனித உள்ளத்தையும் சுற்றியே செயல்படுகிறது. இயற்கையாகவே மனித குலத்தை இயேசு நேசிப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? பிறந்த குழந்தையை அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் அது களங்கமற்றது. அதனால் எதுவும் செய்ய இயலாது. களங்கமற்ற அழகான இயலாமை நிறைந்த அதே குழந்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு கத்தி, ரகளை, ஆர்ப்பாட்டம் செய்து தன் காரியத்தை சாதித்து கொள்ளும் சுயநலவாதியாக மாறி இருக்கும்.

ஆனால் நாம் இந்த இரு நிலைகளிலும் அந்த குழந்தையை நேசிப்பதை கைவிடுவதில்லை. இதை போன்றே இயேசுவும் தன் பிள்ளைகளை நேசிக்கிறார். ஆனால் மனம் திரும்பி மாறின பின்பே அந்த பிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறார். எல்லோரும் பாவம்செய்து தேவ மகிமையற்றவர்களாகி (ரோமர் 3:23) என வேதம் கூறுகிறது.

அப்படி என்றால் இயேசு மனிதனிடம் நேசிக்க என்ன இருக்கிறது? இயேசு பாவத்தை வெறுக்கிறார். மனிதர்கள் பாவம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ரோமர் 5:8 தெளிவாக விளக்குகிறது. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8).

அன்பு கிரியையினால் அறியப்பட வேண்டும். தனிமனிதன் சகமனிதன் மீது வைக்கும் அன்பு மாய்மாலமானது. ஆனால் இயேசு மனிதன் மீது வைத்த அன்பு மாய்மாலமற்றது. பாசாங்கு இல்லாதது. உனக்காக உயிரையும் தருவேன் என்று போலித்தனமாக கூறும் மனிதனை பார்க்கிலும், நம்மீது அன்பு வைத்ததினால் தன் ஜீவனையே பரிசாக மனித குலத்திற்கு ஈந்த தெய்வீக அன்பை நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

- அ.பிரில்லியன்ஸி, வலங்கைமான்.
Tags:    

Similar News