ஆன்மிகம்
முத்தாரம்மன், ஆயிரத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியது

Published On 2020-10-17 04:27 GMT   |   Update On 2020-10-17 04:27 GMT
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக கவசம் அணிந்த குறைவான பக்தர்களே சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தசரா திருவிழாவுக்கு புகழ்பெற்ற இடமாகும். இங்கு ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 அம்மன்கள் சப்பரங்களில் வீதி உலா வந்து, பாளையங்கோட்டை ராமர் கோவில் திடல், கோபாலசாமி கோவில் திடல், மார்க்கெட் ஆகிய இடங்களில் அணிவகுத்து நிற்கும்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் முன்பு சப்பரங்களில் எழுந்தருளும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களுக்கு உள்ளேயே தசரா திருவிழாவை எளிமையாக நடத்தவும், அம்பாளுக்கு சிறப்பு பூஜை மட்டும் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை கணபதி ஹோமம், காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 10.15 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காப்பு கட்டுதலும், மதியம் சிறப்பு பூஜையும் நடந்தது.

விழாவில் முக கவசம் அணிந்த குறைவான பக்தர்களே சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். கொடியேற்றத்தின்போது கோவிலின் முன்புள்ள கேட் பூட்டப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பக்தர்கள் கூட்டமாக நிற்காமல், சாமி தரிசனம் செய்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படவில்லை.

இதேபோல் பாளையங்கோட்டை தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு துர்கா பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.

நெல்லை டவுன் வடக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவிலிலும் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் அனைத்து அம்மன் கோவில்களிலும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலையில் ஆயிரத்தம்மன் கோவில் பந்தலில் கொடி நட்டுதலும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்து அம்மன்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலு இருந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகிற 26-ந்தேதி தசரா திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு சப்பரத்தில் அம்மன் எழுந்தருளலும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

நவராத்திரி திருவிழா தொடங்கியதையொட்டி, நெல்லையில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பெண்கள் கடைகளில் கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News