செய்திகள்
ஜேபி நட்டா

உங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும் போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி வருகிறார் - பாஜக தலைவர் நட்டா பேச்சு

Published On 2020-09-12 13:36 GMT   |   Update On 2020-09-12 13:36 GMT
உங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும் போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி வருவதாக பீகாரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசினார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் முடிகிறது. இதையடுத்து 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலிலும் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் தொடர உள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்தார். 

இந்த சந்திப்பிற்கு பின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், பீகாரின் தர்பங்ஹா நகரில் அமைக்கப்பட்டுவரும் விமான நிலையத்தை மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, நவம்பர் மாத தொடக்கத்தில் தர்பங்ஹா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தார்.  

இந்நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் தர்பங்ஹா நகரில் நடைபெற்ற கட்சி சார்ந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் பேசிய நட்டா,’ உங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும்போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி தர்பங்ஹா நகரிக்கு வருகிறார். ஒரு வேளை உங்கள் விரல் வேறு எதேனும் பொத்தானை அழுத்தினால் யாருமே கவலைப்படதாத அதே கதை மீண்டும் தொடரும்’ என தெரிவித்தார்.  
   

Tags:    

Similar News