செய்திகள்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது - டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Published On 2018-11-09 21:36 GMT   |   Update On 2018-11-09 21:36 GMT
அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #DonaldTrump #AsylumClaims
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க நாட்டினர், அமெரிக்கா வந்து தஞ்சம் அடைவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் ‘கேரவன்’ வாகனங்களில் வருவதை ‘படையெடுப்பு’ என்று டிரம்ப் விமர்சித்து வந்தார்.

நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் பிரசாரத்தின்போதும், மத்திய அமெரிக்க நாட்டினர் வருகைக்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டார். அது மட்டுமின்றி மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க வர முயற்சிக்கிறவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் எல்லையில் அவர் பல்லாயிரக்கணக்கில் படை வீரர்களை குவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சி.என்.என். நிருபர் அகோஸ்டா இந்தப் பிரச்சினையை எழுப்பியபோதுதான் டிரம்புடன் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அதிரடியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் தஞ்சம் கோர முடியாது என கூறும் புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் மேத்யூ விட்டேகரும், உள்நாட்டு பாதுகாப்பு வல்லுனர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இடைக்கால இறுதி விதி என்ற பெயரில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி, அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்கிற பட்சத்தில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிற வெளிநாட்டினரை தடுத்து நிறுத்துகிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவர்கள் மீது சரியானது என கருதப்படுகிற எந்தவொரு கட்டுப்பாட்டையும் அவரால் விதிக்கவும் முடியும்.

இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும், அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகவும் யாரும் சட்டவிரோதமாக நுழைந்து தஞ்சம் கோர முடியாது என கூறப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.

இதுபற்றி அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவிக்கையில், “அகதிகள் தஞ்சம் கோர முடியாது என டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதி, சட்ட விரோதமானது” என கூறியது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் குமி நாய்டூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த கொள்கை முடிவானது, ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை அபாயத்தில் கொண்டு போய் விட்டுள்ளது” என கூறப்பட் டுள்ளது.
Tags:    

Similar News