உடற்பயிற்சி
சின் முத்திரை, தியான முத்திரை, சூன்ய முத்திரை

மன அழுத்தம் நீங்கவும், இதயத்துடிப்பு சீராகவும் யோகச் சிகிச்சை

Published On 2022-05-13 03:40 GMT   |   Update On 2022-05-13 03:40 GMT
நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவிலில் கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்து இந்த முத்திரையையும், தியானத்தையும் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும், மன அழுத்தம் நீங்கும்.
மன அழுத்தம் நீங்கவும், இதயத்துடிப்பு சீராகவும் ஆங்கில மருத்துவத்தில் முழுமையான தீர்வு கிடைக்காது. எத்தனை மாத்திரை சாப்பிட்டாலும் நமது பண்புகள் ஆழ் மனதில் உள்ள கவலைகளை அழிக்க முடியாது. அதற்கு முத்திரையும், தியானமும்தான் முழுமையான தீர்வாக அமையும். யோகமுத்திரை மூலம், எளிமையான தியானம் மூலமும் நமது ஆழ்மன பதிவுகளை அகற்றி விடலாம்.

சின் முத்திரை:நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் கட்டை விரல், ஆள்க்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இயல்பாக நடக்கும் மூச்சை கவனித்து இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

தியான முத்திரை:நிமிர்ந்து அமரவும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் இடது கை கீழ் அதன்மேல் வலது கையை வைக்கவும்.இரு பெருவிரல் நுனியும் தொடட்டும். கைகளை மடியில் வைத்துக் கொள்ளவும்.
மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் மூச்சை இழுக்கும்பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை சுவாசிப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும் பொழுது நமது ஆழ்மனதில் உள்ள டென்ஷன், அழுத்தம், கவலை நீங்குவதாக எண்ணவும். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் நினைத்து அந்த இடத்தில் உங்களது மூச்சை மட்டும் அமைதியாக கூர்ந்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.

சூன்ய முத்திரை:நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் படும்படி வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.
இந்த முத்திரை இதய பட படப்பு நீக்கும். இதய வால்வுகள் நன்றாக இயங்கும். மன அழுத்தத்தினால் ஏற்பட்ட இதயத்துடிப்பை சரி செய்கின்றது. மன அமைதியை தரவல்லது.

மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தினமும் காலை / மாலை இரண்டு வேளையும் பயிற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) மன அழுத்தம் படிப்படியாக குறையும். மன அமைதி கிடைக்கும். பின்பு ஆழ்ந்த நித்திரை கைகூடும்.
 காலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். எழுந்து எளிமையான இந்த முத்திரை தியான பயிற்சிகளை செய்ய வேண்டும். இரவு படுப்பது 9.30 மணி முதல் 10 மணிக்குள் படுத்துவிட வேண்டும். இரவு படுக்குமுன் தியான முத்திரையில் அமர்ந்து இரண்டு நிமிடம் நெற்றிப்புருவ மத்தியில் தியானம் செய்துவிட்டு படுக்கவும்.

நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவிலில் கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்து இந்த முத்திரையையும், தியானத்தையும் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும், மன அழுத்தம் நீங்கும்.

பெ.கிருஷ்ணன் பாலாஜி, M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com
Tags:    

Similar News