ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி?

Published On 2020-12-15 06:57 GMT   |   Update On 2020-12-15 06:57 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா பதில் அளித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பூஜைகள் நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளுக்கு நாள், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் 238 பேருக்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் காவலர்கள் உட்பட 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள சுகாதார துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வந்த அவரிடம் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘மண்டல காலம் முடியும் வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க தேவை இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மண்டல சீசன் முடியும் வரை (டிசம்பர் - 26) தற்போதுள்ள நிலை தொடரும். மகர விளக்கை முன்னிட்டு டிசம்பர் 30-ந் தேதி முதல் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை‘ என்று பதில் அளித்தார்.
Tags:    

Similar News