செய்திகள்

யுவராஜ் தொடர்ச்சியாக 3 சிக்ஸ்: தன் பெயரை இழுத்த சாஹலுக்கு பதிலடி கொடுத்த ஸ்டூவர்ட் பிராட்

Published On 2019-03-30 11:32 GMT   |   Update On 2019-03-30 11:32 GMT
யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்ததும், 2007-ல் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்பட்டு விடுமோ? என உணர்ந்தேன் என்ற சாஹலுக்கு பிராட் பதிலடி கொடுத்துள்ளார். #IPL2019
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது சாஹல் வீசிய ஓவரை யுவராஜ் சிங் எதிர்கொண்டார்.

இதில் முதல் மூன்று பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்சருக்கு தூக்கினார். ஆனால், 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘யுவராஜ் சிங் மூன்று சிக்சர்கள் அடித்தபோது, நான் ஸ்டூவர்ட் பிராட் போன்று உணர்ந்தேன்’’என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டூவர்ட் பிராட் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘10 வருடத்தில் நான் 437 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளேன். இந்த விஷயத்திலும் என்னைப் போன்று உணர்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்தின் முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹல் இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News