செய்திகள்
கோப்புப்படம்

லாரி மீது கார் மோதி விபத்து : தந்தை-மகன் பலி

Published On 2021-01-13 23:46 GMT   |   Update On 2021-01-13 23:46 GMT
பொங்கல் விழாவை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பலி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொட்டாம்பட்டி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குமாரபட்டியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாண்டியன் (வயது 41). தற்போது மதுரை சூர்யாநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மின்வாரிய ஒப்பந்தகாரரர். இந்தநிலையில் சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாட குடும்பத்தினருடன் 2 காரில் புறப்பட்டனர்.

ஒரு காரில் பாண்டியன், அவருடைய மகன் திவாகர்(14) ஆகியோர் வந்துள்ளனர். காரை பாண்டியன் ஓட்டினார். பின்னால் மற்றொரு காரில் மனைவி மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர். பாண்டியன் ஓட்டி வந்த கார் கொட்டாம்பட்டி அருகே மணப்பட்டி அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பாண்டியன், அவரது மகன் திவாகர் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பின்னால் காரில் வந்த குடும்பத்தினர் நேரில் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், கொட்டாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் உதவியுடன் 2 மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கிய தந்தை, மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News