செய்திகள்
ராக்கெட்

சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Published On 2021-10-16 05:35 GMT   |   Update On 2021-10-16 06:48 GMT
விண்கலம் சுமார் 6½ மணி நேர பயணத்துக்கு பிறகு சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.
பீஜிங்:

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சீனா சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. அவர்கள் 3 மாதங்கள் தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை செய்து விட்டு பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் சீனா 3 விண்வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. லாங்கு மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங், யே குவாங் பு ஆகிய 3 வீரர்களும் விண்வெளிக்கு முதல்முறையாக சென்றனர். இதில் ஒரு பெண் வீராங்கனையும் அடங்குவார்.

இந்த ராக்கெட் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று நள்ளிரவு ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களில் விண்கலம் தனியாக பிரிந்து புவி வட்ட பாதையில் நுழைந்தது. விண்கலம் சுமார் 6½ மணி நேர பயணத்துக்கு பிறகு  சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. விண்வெளி நிலையத்துடன் இணைந்த பிறகு 3 வீரர்களும் அதற்குள் சென்றனர்.

3 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்துக்கான அடுத்தக்கட்ட பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள் என்றும் விண்வெளி நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான கருவிகளை நிறுவ அவர்கள் விண்வெளி நடைபயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags:    

Similar News