உள்ளூர் செய்திகள்
புதுவையில் நிதி நிறுவனம் சூறை-4 பேர் கைது
நைனார்மண்டபத்தில் நிதி நிறுவனம் மற்றும் ஓட்டலை சூறையாடி உரிமையாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 29). இவர் நைனார் மண்டபம் தென்னஞ்சாலை ரோட்டில் அமுதா என்பவர் நடத்தி வரும் ஓட்டல் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று கோபி தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனம் முன்பு நிறுத்தி விட்டு பைனான்ஸ் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்து, தமிழரசன், கார்த்திக் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கோபியின் மோட்டார் சைக்கிள் மீது ஏறி அமர்ந்தனர். இதனை கோபி தட்டிக்கேட்டு அவர்களை மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதில் இரு தரப்பினரிடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்து உள்பட 4 பேரும் சேர்ந்து கோபியின் மோட்டார் சைக்கிள் மற்றும் நிதி நிறுவன அலுவலக கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். மேலும் கோபியையும் சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற அமுதாவையும் தாக்கிய அவர்கள் ஓட்டலையும் அடித்து உடைத்து சூறையாடினர். அதோடு கோபிமற்றும் அமுதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து கோபி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.