செய்திகள்
பிரஸ்டா கோஹிஸ்டனி

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை

Published On 2020-12-25 10:15 GMT   |   Update On 2020-12-25 10:15 GMT
ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

அதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக அந்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பிரபலமான நபர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கபிசா மாகாணத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி (29) பெண் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இவர் அந்நாட்டின் மிகவும் பிரபலமான பெண் உரிமைகள் சமூக ஆர்வலாராக இருந்துவந்தார்.

கபிசா மாகாணத்தின் கோஹிஸ்டன் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பிரஸ்டா அவரது சகோதரனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

மர்மநபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பிரஸ்டா கோஹிஸ்டனியும் அவரது சகோதரரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.

பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News