செய்திகள்
வீராணம் ஏரி

வாட்டி வதைக்கும் வெயில்- வேகமாக குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்

Published On 2021-03-05 04:08 GMT   |   Update On 2021-03-05 04:08 GMT
வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த ஆண்டு புயல் மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டதால் வீராணம் ஏரி கரை ஓர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் தீவு போல் காட்சி அளித்தது. தற்போது வடவாறு வழியாக தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. அதோடு மழையும் பெய்யவில்லை.

ஆனால் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.80 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 40.59 அடியாக குறைந்துள்ளது. ஏரியில் இருந்து பாசனத்துக்காக 79 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பிவைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 கன அடிநீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
Tags:    

Similar News