ஆன்மிகம்
பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

பவானி கூடுதுறையில் புனிதநீராடிய பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்

Published On 2021-02-11 05:37 GMT   |   Update On 2021-02-11 05:37 GMT
மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடி, புரட்டாசி மாதங்களில் வந்த அமாவாசைகளுக்கு ஆறுகளுடன் கூடிய வழிபாட்டு தலங்களில் மக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் வீடுகளிலேயே எளிமையாக முன்னோர்களை வழிபட்டனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையொட்டி தை அமாவாசையான இன்று பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பவானி கூடுதுறையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினர்.

கூட்டம் காரணமாக பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் அருகில் உள்ள காலி இடங்களில் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தர்ப்பணம் திதி கொடுத்து பவானி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ் வரரை வழிபட்டனர்.

பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தது.

இதேப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதேபோல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீராடி வழிபட்டனர்.

கொடுமுடி காவிரி ஆற்றிலும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான பேர் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர் கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்பு அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்ததால் காவிரி கரையே களை கட்டியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம், சமூக பாதுகாப்பு இடைவெளி குறித்து அறிவித்து கொண்டிருந்தனர். தை அமாவாசையையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் இன்று இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News