உள்ளூர் செய்திகள்
வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தஞ்சாவூர்:
லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இரவில் குளிர்ந்த காற்றுவீசியது.
இன்று அதிகாலை 3 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுவீசியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரம் மிதமான அளவில் மழை பெய்தது.
சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து காலை 9 மணி வரை வெயில் இன்றி காணப்-பட்டது. அதன் பிறகு வெயில் அடித்தது.
இருந்தாலும் மாலை அல்லது இரவில் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேப்போல் வல்லம், திருக்காட்டுபள்ளி, ஒரத்தநாடு, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான அளவில் மழை பெய்தது.
இதேப்போல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடியற்-காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது.
மேலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சூளையில் செங்கல் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது.
மீண்டும் மழை இன்றி வெயில் அடிக்கும் பட்சத்தில் செங்கல் தயாரிப்பு மீண்டும் தொடங்கும் என அதன் உரிமையாளர்கள் கூறினர்.