செய்திகள்
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை படத்தில் காணலாம்.

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனை

Published On 2021-10-01 14:41 GMT   |   Update On 2021-10-01 14:41 GMT
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 800 சிக்கியது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. நாள்தோறும் வாகன பதிவு, புதுப்பித்தல், ஒட்டுனர் உரிமம் போன்ற பல்வேறு பணிகள் காரணமாக எந்தநேரமும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடன் இந்த அலுவலகம் காணப்படும். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் போலீசார் அதிரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் புகுந்தனர். இதனையடுத்து அந்த அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த வாகன பதிவு, ஒட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர்.

இதில் பல்வேறு பணிகள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழிமுறை காரணமாக பணம் பரிமாற்றம் என்பது மிக குறைவு. இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 800 சிக்கியது.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத பணம் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இரவு வெகு நேரம் வரை நீடித்தது.

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News