செய்திகள்
கைது

கடம்பூர் அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை- காதலன் கைது

Published On 2021-09-11 08:26 GMT   |   Update On 2021-09-11 08:26 GMT
கடம்பூர் அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக தந்தை மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

மாணவியின் தாய், தந்தைக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாணவியின் தாயார் கணவரை பிரிந்து மகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவியின் தந்தை தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே மகளை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து மாணவியின் தாயார் அவரை தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.

தொடர்ந்து மாணவி வாந்தி, மயக்கத்தால் அவதிப்பட்டதால் அவரை 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நடந்த விசாரணையில் சிறுமியை அவரது தந்தையும், காதலனும் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News