செய்திகள்
லஞ்சம் வாங்கிய செவிலியர்

மகப்பேறு நிதிஉதவி பெற கர்ப்பிணியிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய செவிலியர் கைது

Published On 2021-02-19 14:07 GMT   |   Update On 2021-02-19 14:07 GMT
மகப்பேறு நிதிஉதவி பெற கர்ப்பிணியிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய செவிலியரை போலீசார் கைது செய்தனர்.
தரகம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது 51). இவர் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் சிந்தாமணிபட்டியை சேர்ந்த கர்ப்பிணியான இளமதி மகப்பேறு நிதிஉதவி பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அதற்கு நிதியுதவி பெறவேண்டுமென்றால் ரூ.2,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பழனியம்மாள் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளமதி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனடிப்படையில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜ், இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இளமதியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை பழனியம்மாளிடம் கொடுக்க வைத்தனர். அந்த பணத்தை இளமதி, பழனியம்மாளிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News