செய்திகள்
கோப்பு படம்

உள்ளாட்சி தேர்தலில் மோதல் - அ.தி.மு.க. பிரமுகர் வீடு சூறை: 19 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2020-01-14 08:54 GMT   |   Update On 2020-01-14 08:54 GMT
அம்மாப்பேட்டை அருகே அதிமுக பிரமுகர் வீடு சூறையாடப்பட்டதை தொடர்ந்து 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அம்மாப்பேட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அன்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வீடு சூறையாடப்பட்டது.

சம்பவத்தன்று அம்மாப்பேட்டை அருகே உடையார் கோவில், கீழகோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா, அ.தி.மு.க. பிரமுகர். அதே ஊரில் குடியான தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அந்த பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் சிவகணேசன் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். சிவகணசன் தோல்வியடைந்ததற்கு ராஜாதான் காரணம் என நினைத்த ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சம்பவத்தன்று மோட்டர் சைக்கிள்களில் அரிவாள், உருட்டு கட்டைகளுடன் ராஜா வீட்டிற்கு சென்று வாசலில் நிறுத்தி வைத்திருந்த கார், பைக் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.

ராஜாவின் வீட்டையும் சூறையாடிவிட்டு, வீட்டிலிருந்த ராஜாவின் மனைவி வசந்தி(வயது31) என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து ராஜா மனைவி வசந்தி கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து ராஜா வீட்டை சூறையாடிய ராமச்சந்திரன், சிவகணேசன் உள்பட 19 பேர்கள் மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் உள்கட்சியினரிடையே நடந்த அடிதடி அ.தி.மு.கவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News