செய்திகள்
பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் சிக்கியது

Published On 2021-04-03 11:16 GMT   |   Update On 2021-04-03 11:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 7½ லட்சம் சிக்கியது.
கல்லாவி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓலைப்பட்டி கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800 கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பறக்கும் படையினர் சரக்கு வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம், தாசில்தார் ஆஞ்சநேயலு ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த 3 பேரிடமும் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அச்சமங்கலம் பகுதியில் கிரானைட் கற்கள் வாங்க பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து பர்கூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

ஓசூர் அருகே டி.வி.எஸ். சோதனைச்சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த பார்த்தசாரதி என்பவரை தடுத்து, காரை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி ரூ.79,300 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News