செய்திகள்
விவசாய குழு தலைவர்

8-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் - விவசாய குழுக்கள் திட்டவட்டம்

Published On 2020-12-05 14:46 GMT   |   Update On 2020-12-05 14:46 GMT
அறிவிக்கப்பட்டபடி நாடு தழுவிய அளவில் 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லி எல்லையில் திரண்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்ட வண்ணம் உள்ளனர். இதற்கிடையில், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் விவசாய குழு தலைவர்களுடன்  மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பும் தங்கள் நிலைபாட்டை தெரிவித்தன.

மத்திய அரசு தரப்பில் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை முழுவதும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் நிலையாக இருந்தனர். 

இதனால், இரு தரப்புக்கும் இடையே எந்த வித முடிவுகளும் எடுக்கப்படாமல் 5-ம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இதையடுத்து, 6-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு தழுவிய அளவில் வரும் 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் விவசாய குழுக்கள் நேற்றே அறிவித்திருந்தன. தற்போது மத்திய அரசுடனான 5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து விவசாய குழு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

விவசாய குழுக்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகெய்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு ஒரு திட்டத்தை தயாரித்து எங்களிடம் கொடுக்க உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்தது. 

ஆனால், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என கூறினோம். அறிவிக்கப்பட்டபடி நாடு தழுவிய அளவில் 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறினார்.    
Tags:    

Similar News