செய்திகள்
கைது

குடித்துவிட்டு வந்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி

Published On 2019-12-04 10:18 GMT   |   Update On 2019-12-04 10:18 GMT
மகாராஷ்டிராவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவனை தனது மகனின் உதவியோடு கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பால்கர்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் வசாய் பகுதியைச் சேர்ந்தவர் அனுஷ்க் சவான் (வயது 45). இவருக்கு ஷோபா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த அனுஷ்க் தினமும் குடித்துவிட்டு  வீட்டிற்கு வந்து மனைவியையும் குழந்தைகளையும் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

நிகழ்வன்று வழக்கம் போல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அனுஷ்க் தூங்கிய பின் ஷோபா தனது இளைய மகன் (வயது 15) உதவியுடன் துப்பட்டா மூலம் அனுஷ்க் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அனுஷ்க் உயிரிழந்தார். பின்னர் அளவுக்கு அதிகமாக குடித்ததால் போதை காரணமாக அனுஷ்க் உயிரிழந்ததாக காண்பிப்பதற்கு அவரது உடலை வீட்டு வாசலில் கிடத்தியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஷோபாவை போலீசார் இன்று கைது செய்தனர். அவரது இளைய மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News