ஆன்மிகம்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் முககவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி

Published On 2020-09-03 06:46 GMT   |   Update On 2020-09-03 06:46 GMT
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து, கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் குமரி மாவட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதே சமயத்தில், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் அனுமதி வழங்கப்படவில்லை.

நேற்று முதல் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலிலும் காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கும் வகையில் கோவிலில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News