திருச்செந்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை: பால் வியாபாரி-நண்பர் மீது வழக்கு
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி தெற்கு தெருவை சேர்நதவர் ராமசாமி. இவரது மகன் செந்தில். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் ராமநாதபுரம் தெருவை சேர்ந்த பொன் சூர்யா.
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் அந்த வழியாக காரில் சென்றனர். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமியை நைசாக பேசி காரில் அழைத்துள்ளனர். அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார்.
ஆனால் 2 பேரும், சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் சிறுமியை இறக்கி விட்டுள்ளனர்.
அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார், செந்தில் மற்றும் அவரது நண்பர் பொன் சூர்யா ஆகிய 2 பேர் மீதும் ஆள் கடத்தல், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த 2 பேரும் தலைமறைவாகினர். போலீசார் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.