ஆன்மிகம்
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

Published On 2019-12-30 07:43 GMT   |   Update On 2019-12-30 07:43 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி இன்று நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை 27-ந் தேதி நடந்தது. அன்றைய தினம் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்பட்டது.

பின்னர் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது.

பின்னர் நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும்.

பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சன்னிதானத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்பட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

வாகனங்களை நிறுத்தம் செய்ய நிலக்கல் பகுதியில் விசாலமான இட வசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும்.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், மாநில தலைநகரமான திருவனந்தபுரம், மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்றார் போல் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
Tags:    

Similar News