கோவையில் காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் விஷம் குடித்த பட்டதாரி வாலிபர் பலி
கோவை:
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரகாஷ் (வயது 24). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நண்பர்களுடன் சரவணம்பட்டி அருகே உள்ள எல்.ஜி.பி.லே-அவுட்டில் அறை எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.பிரகாஷ் கடந்த சில வருடங்களாக ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் பிரகாஷ் கடந்த சில மாதங்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் காதலி இறந்த துக்கத்தில் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக பிரகாஷை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.