செய்திகள்
ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை சீனிவாசபுரத்தில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (வயது37). இவர் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சமயன்குடிகாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ராஜராஜேஸ்வரி பள்ளியிலிருந்து தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் வன்னிபட்டு அருகே சென்றுக்கொண்டிருந்த போது, அதே சாலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ராஜராஜேஸ்வரியை வழிமறித்து அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது ராஜராஜேஸ்வரி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ராஜராஜேஸ்வரி ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.