வீரவநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை
நெல்லை:
வீரவநல்லூரில் உள்ள கீழகுளம் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
இந்த கடையில் மேற்பார்வையாளராக மாரியப்பன் (வயது47) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
நள்ளிரவு அங்கு வந்த கும்பல், மின்சார வயரை துண்டித்து விட்டு, கடையின் முன்பக்க பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை அவர்கள் கொள்ளையடித்தனர்.
பணம் இருக்கிறதா? என்று தேடி பார்த்தனர். ஆனால் பணம் இல்லாததால் மதுபாட்டில்களுடன் தப்பி ஓடிவிட்டனர். நேற்று கடைக்கு வந்த மாரியப்பன் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.