செய்திகள்
ராஜேஷ் தோபே

கொரோனா 3-வது அலை டிசம்பரில் ஏற்படலாம்: மந்திரி ராஜேஷ் தோபே

Published On 2021-11-25 03:26 GMT   |   Update On 2021-11-25 03:26 GMT
தற்போது மகாராஷ்டிராவில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பாதிப்பு அளவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கொரோனா முதல் மற்றும் 2-வது அலை நாட்டையே முடக்கிப்போட்டது. ஊரங்கிற்கு இணையான கொரோனா கட்டுப்பாடுகள் தொழில்களும் முடங்கின. அனைத்து வகையிலும் மாநிலத்தினை ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது.

ஆனால் கொரோனா 3-வது அலை அச்சம் இன்னும் குறையவில்லை. எனவே நோய் பாதிப்பின் தாக்கத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்தநிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் லேசாக ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகள் (ஐ.சி.யூ) தேவை ஏற்படாது. தற்போது மகாராஷ்டிராவில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பாதிப்பு அளவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராடிய சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய மூத்த குடிமக்கள் மற்றும் பாதிக்கப்பட கூடிய பிரிவினருக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்த கோரிக்கையுடன் கடந்த வாரம் மத்திய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தேன். மேலும் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.

ஆனால் அவர் ஐ.சி.எம்.ஆருடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துவிட்டு பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயின் முதல் அலை செப்டம்பர் 2020-ம் ஆண்டிலும், 2-வது அலை பாதிப்பு ஏப்ரல் 2021-லும் தீவிரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News