செய்திகள்
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டது- பயணிகள் ரெயில்கள் ரத்து
சரக்கு ரெயில் தடம்புரண்டதால், பயணிகள் ரெயில்கள் கான்பூரில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
கான்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம், துண்ட்லா-கான்பூர் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் இன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பியாபூர்-ரூசா ரெயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில், 24 பெட்டிகள் தடம்புரண்டு கடுமையாக சேதமடைந்தன.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, தண்டவாளத்தில் தாறுமாறாக சிதறிக் கிடந்த ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சரக்கு ரெயிலில் எந்த சரக்கும் இல்லாமல் காலி பெட்டிகளாக இருந்ததால், பெரிய அளவில் இழப்பு ஏற்படவில்லை. விபத்து காரணமாக துண்ட்லா-கான்பூர் இடையே இயக்கப்படும் அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. ரெயில்கள் கான்பூரில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவுக்குள் சீரமைப்பு பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.