ஆன்மிகம்
மகாளய பட்சம்

தோஷம் போக்கி மகத்தான வாழ்க்கை தரும் ‘மகாளய பட்சம்’

Published On 2020-09-04 04:30 GMT   |   Update On 2020-09-04 04:30 GMT
ஆவணி பவுர்ணமி அல்லது புரட்டாசி பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரையான பதினைந்து நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படும்.
ஆவணி பவுர்ணமி அல்லது புரட்டாசி பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரையான பதினைந்து நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படும். ‘மகாளயம்’ என்பதற்கு ‘பெரிய கூட்டம்’ எனப்பொருள். ‘பட்சம்’ என்பது பதினைந்து நாட்களைக் குறிப்பதாகும். அதாவது, மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் பித்ரு லோகத்திலிருந்து வந்திருந்து, அவரவர் சந்ததிகளின் இல்லத்தில் கூடும் பெரும் புண்ணிய காலமே ‘மகாளய பட்சம்’ என்பதாகும். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு.

வாழும் காலத்தில் தன்னைத் தேடி வந்து யாசகம் கேட்ட எவராக இருந்தாலும், அவர்கள் கேட்டதை ‘இல்லை’ என்று சொல்லாமல் கொடுத்தவன் கர்ணன். அவன் செய்த தானத்தால் சேர்ந்த புண்ணியங்கள் அனைத்தும், குருசேத்திரப்போரில் அவனது உடல் முழுவதும் அம்புகள் தைத்திருந்தபோதிலும், உயிரை போகவிடாமல் காத்து நின்றன. அந்த வகையில் கர்ணன் எவ்வளவு பெரிய வள்ளல் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். அந்த புண்ணியங்களை எல்லாம், வேதியர் உருவில் வந்த கண்ணன் பெற்றுச் சென்ற பிறகுதான், கர்ணனின் உயிர் அவனது உடலை விட்டுப்பிரிந்தது.

அப்படி உடலை விட்டுப் பிரிந்த கர்ணனின் உயிர், தேவலோகம் சென்றது. அங்கு அவனது ஆன்மாவுக்கு பசி எடுத்தபோது, அவனது தட்டில் வைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் பொன்-பொருளாகவே இருந்தன. உணவுப் பதார்த்தங்கள் எதுவும் இல்லை. “பொன்-பொருட்களை எப்படிச் சாப்பிடுவது?” கர்ணன் கேட்டான். அப்போது அங்கிருந்து தேவ தூதர்கள், “நீங்கள் பூலோகத்தில் பொன்-பொருட்களை மட்டுமே தானமாக வழங்கியிருக்கிறீர்கள். உணவுப் பொருட்கள் எதையும், எப்போதும் தானமாக ஒருவருக்கும் அளிக்கவில்லை. அதோடு, பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் உங்களுடைய முன்னோர்களுக்கும் கூட நீங்கள் எந்த ஒரு சிரார்த்தத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்த நிலைமை” என்று எடுத்துக் கூறினர்.

“இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறதா?” என்று கர்ணன் கேட்டதற்கு, “புரட்டாசி அமாவாசைக்கு முன்பான 15 நாட்கள் பூலோகம் சென்று, முன்னோர்களுக்கான சிரார்த்தங்களை செய்து வந்தால், இந்தப் பிரச்சினையில் இருந்து மீளலாம்” என்றனர். அதன்படியே 15 நாட்கள் பூலோகம் வந்து சிரார்த்தங்களையும், அன்னதானங்களையும் செய்தான், கர்ணன். இதையடுத்து அவனுக்கு தேவலோகத்தில் பசிக்கு உணவளிக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இந்த 15 நாட்களில் அன்னதானம் செய்வது பெரும் புண்ணிய பலன்களை நம் பித்ருக்களுக்கும், அவர்கள் வாயிலாக நம் தலைமுறைக்கும் கிடைக்கச் செய்யும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட தீர்த்த திருத்தலங்கள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி என பல இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம் திருத்தலம்.

பித்ருக்கள், வழிபாட்டுக்கு உரியவர்கள். அவர்களை நாம் வணங்காதிருந்தால், அவமதித்ததாகிவிடும். ஆகையால் அது ‘பித்ரு தோஷம்’ என்று சொல்லப்படுகிறது. நம் அப்பாவோ, தாத்தாவோ, சித்தப்பாவோ... நம் வம்சத்தில் யாரோ ஒருவர் பித்ருக்களை வணங்காமல் இருந்திருந்தால் கூட, அவையெல்லாம் நமக்கு பாவங்களாக வந்தடையும் என்கிறார்கள். குடும்பத்தில் காசு பணம் இல்லாத நிலை, காசு பணம் இருந்தும் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத சூழல், ஒற்றுமை இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை, வாரிசு இல்லாத துக்கம், வாரிசு இருந்தாலும் உடல்நலக்குறைபாடு போன்றவை, பித்ரு தோஷத்தால் வரும் பாதிப்புகளாக சொல்லப்படுகிறது.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட, திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது வணங்கி வழிபடவேண்டும். இந்தநாளில், புனித நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, நம் முன்னோரைப் பிரார்த்தித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது நமக்கும், நம் சந்ததியினருக்கும் நன்மை சேர்ப்பதாகும். எனவே மகாளய பட்ச காலத்தில், தினமும் பித்ருக்களை ஆராதியுங்கள். அவர்களுக்கு அன்னம் படைத்து நைவேத்தியம் செய்யுங்கள். தினமும் காகத்துக்கு அன்னமிடுங்கள். உங்களால் முடிந்த அளவு, ஏழை-எளியவர்களுக்கு உணவிடுங்கள். மேலும் முடிந்த தான தர்மங்களையும் செய்யுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.
Tags:    

Similar News