உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைகளுக்கு அறிவித்த திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாய துறையில் நாம் பல புரட்சிகளை செய்ய வேண்டி உள்ளது. சிறு விவசாயிகளும், நவீன இயந்திரங்களை பயன் படுத்தும் நிலை வரவேண்டும். அப்போதுதான் இதில் சிறந்த முன்னேற்றங்களை காண முடியும்.
அறுவடை செய்ததற்கு பிறகு விவசாய பொருட்களை பாதுகாத்து வைப்பது நமக்கு மிகவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு ஏற்பட வேண்டும்.
அந்த பொருட்களை பாடம் செய்து பாதுகாப்பது அவசியமான ஒன்று. இதில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. பதப்படுத்துதல் துறையில் புரட்சி ஏற்பட வேண்டும்.
21-ம் நூற்றாண்டில் அறுவடைக்கு பிந்தைய உணவு பதப்படுத்துதல் என்பது வேளாண் துறையில் சக்தியை மேம்படுத்துவதாக அமையும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
20-30 ஆண்டுகளுக்கு முன்பே இவற்றை சரியாக செய்திருந்தால் அது நாட்டுக்கு மிகப்பெரிய பலனை கொடுத்திருக்கும். பதப்படுத்துதல் துறையில் உலகின் முன்னோடியாக இந்தியா திகழ வேண்டும்.
அப்போதுதான் நாம் உலக சந்தையில் போட்டி போட முடியும்.
விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு சரியான சந்தையை ஏற்படுத்தி தருவோம். இதற்கு இன்னும் அவகாசம் தேவை.
விவசாயத் துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கு பெறுவது அவசியமாகும். இதன்மூலம் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.
விவசாய துறை புதிய வளர்ச்சியை நோக்கி செல்லும் காலம் உருவாகி இருக்கிறது. பட்ஜெட்டில் இந்த துறைக்காக அதிக நிதிகளை ஒதுக்கி இருக்கிறோம். ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.