செய்திகள்
விபத்து

சித்தோடு அருகே கார் கவிழ்ந்து 2 பேர் பலி

Published On 2021-07-22 09:28 GMT   |   Update On 2021-07-22 09:28 GMT
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சித்தோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மனைவி ராணி, மகன் நாகேந்திரன் (வயது 20) மற்றும் மகனின் நண்பர் ரஞ்சித்குமார், உறவினர் அருண் (19) ஆகியோருடன் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றார்.

பின்னர் அவர்கள் மீண்டும் சித்தோடு நோக்கி இரவு வந்து கொண்டிருந்தனர். காரை நாகேந்திரன் ஓட்டி வந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் கார் ஈரோடு- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் சித்தோடு அருகே உள்ள தயிர்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது கார் எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் இடது பக்கம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

இந்த விபத்தில் நாகேந்திரன், அருண் ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தனர். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மாரிமுத்து, அவரது மனைவி ராணி, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான நாகேந்திரன், அருண் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News