செய்திகள்
ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 9 கடைகளுக்கு 'சீல்'
வணிக வளாகங்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க வேண்டும். வணிக வளாகங்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் பின்பற்று கின்றனரா? என நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் 3 ஷோரூம்கள், 3 நகை அடகு கடை நிறுவனங்கள், 2 துணிக் கடைகள், மோட்டார் வாகன உதிரி பாகம் விற்கும் ஒரு கடை ஆகியவை ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த 9 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அரசு அனுமதி அளிக்காத கடைகள், நிறுவனங்கள் கொரோனா நடத்தை விதிமுறைகளை மீறி இயங்கினால் அவை அனைத்தும் பூட்டி ‘சீல்’ வைக்கும் பணி தொடரும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.