செய்திகள்
திருப்பத்தூரில் பூத் முகவர்கள் உள்பட 450 பேருக்கு கொரோனா பரிசோதனை
அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளரின் முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பத்தூர்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை(2-ந்தேதி) நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் வாக்கு எண்ணிக்கை யையத்துக்கு வரும் அரசு அதிகாரிகள், வேட்பாளர்கள். அரசியல் கட்சி முகவர்கள், பத்திரிகையாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு வேட்பாளருக்கு முதன்மை முகவர் உள்பட 22 பேர் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர். இதில் ஒரு சில வேட்பாளர்களுக்கு போதுமான முகவர்கள் இல்லை. 26 வேட்பாளர்களுக்கு 497 மனுக்கள் பெறப்பட்டது.
இதனையடுத்து, அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளரின் முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் அழகப்ப்பா பாக்கியம் திருமண மகாலில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
இதில் திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்த 365 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 18 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். வருவாய்த்துறையை சேர்ந்த 85 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். மொத்தம் 450 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.