செய்திகள்
ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ்

வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் - சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரணை

Published On 2019-10-12 15:51 GMT   |   Update On 2019-10-12 15:51 GMT
சேலம் அருகே வீடியோ எடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலத்தை அடுத்த வேம்படிதாளம் மதுரை வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது42).

ஆட்டோ டிரைவரான இவர் வாலிபர் ஒருவரை ஹேமோ செக்சுக்கு அழைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே மோகன்ராஜ் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் தகவல் பரவியது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் ரூ. 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அடைத்து வைத்து தாக்குதல், ஆபாச படம் எடுத்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறையில் இருந்த அவரை மீண்டும் கைது செய்தனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 10-ந் தேதி கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அப்போது கோர்ட்டில் அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி சேலம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் செந்தில்குமார் (பொறுப்பு) 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கொடுத்தார். இதையடுத்து சிறையில் இருந்த ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்து பரிசோதனை செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது மோகன்ராஜ் இதுவரை எத்தனை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்தார், அதனை வீடியோவாக பதிவு செய்த செல்போன்கள் எங்கு உள்ளது. இதில் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யார், யார்?என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களையும் கைப்பற்றிய போலீசார் அதனையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த செல்போனில் மேலும் பல பெண்களின் ஆபாச படம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெண்களை மிரட்டி அவர் பலாத்காரம் செய்தது தொடர்பான பல அதிர்ச்சி தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு திகைத்து போன போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பலாத்கார சம்பவத்தில் மோகன்ராஜிக்கு உதவிய நண்பர்கள் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள். மோகன்ராஜிடம் நடைபெறும் விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News