செய்திகள்
டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி
டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தினமும் சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல்வாதிகளும் இலக்காகி வருகின்றனர்.
அந்த வரிசையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுற்றுச்சூழல் துறை மந்திரியும் இணைந்துள்ளார். டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக செயல்பட்டுவரும் கோபால் ராய்க்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்திரி கோபால் ராயின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.