மாசில்லா பிளாஸ்டிக் உறுதிமொழி நிகழ்ச்சி- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை:
தமிழக அரசால் கடந்த ஜனவரி-1 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைத்து கைப்பேசி செயலியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23.8.2018 அன்று தொடங்கி வைத்தார்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை 10.12.2018 அன்று தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு”” உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
உறுதிமொழி ஏற்கப்பட்ட பிறகு, குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.